அமெரிக்காவின் வடகிழக்கை நோக்கிச்செல்லும் புயல்: நூற்றுக்கணக்கான விமானப்பயணங்கள் ரத்து

அமெரிக்காவின் வடகிழக்கை நோக்கிச்செல்லும் புயல்: நூற்றுக்கணக்கான விமானப்பயணங்கள் ரத்து

2 mins read
d37aa601-d736-45c8-9d59-f7e5658f99ef
பனியில் விளையாடும் அமெரிக்க சிறுவர் (படம்: ஏஃப்பி) -

நியூயார்க் :அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளை உலுக்கிவரும் கடுமையான குளிர்காலப் புயல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) வடகிழக்கு பகுதியை அடைந்தது.

நியூயார்க், நியூ இங்கிலாந்து ஆகியவற்றில் 30 சென்டிமீட்டருக்கு மேலாகப் பனியும், பென்செல்வேனியாவில் பனிக்கட்டிகளும் திரளும் என தேசிய வானிலைச் சேவை முன்னுரைத்துள்ளது.

இந்தப் புயல் முன்னதாக கலிஃபோர்னியாவில் இருந்து வடமேற்கு வரை பல்வேறு பகுதிகளில் பலத்த பனியையும் மற்ற பகுதிகளில் கன மழையையும் உண்டாக்கியது. சில மரணங்களுக்கும் இந்தப் புயல் காரணமாகக் கூறப்படுகிறது.

ஐந்து வயதுடைய சிறுவன், சிறுமி இருவரும் மத்திய அரிசோனாவில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் பயணித்த வாகனம் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரிசோனாவில் அடித்துச் செல்லப்பட்டதினால் அவர்கள் மரணமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் இரு பெரியவர்களும் நான்கு பிள்ளைகளும் ஹெலிகாப்டருடன் காப்பாற்றப்பட்டனர். ஆனால் ஆறு வயது சிறுமி ஒருவரை இன்னமும் காணவில்லை. சிறுமியைத் தேடும் பணி தொடர்கிறது.

மிசோரியின் பெட்டன் நகருக்கு அருகில், ஐந்து வயதும் எட்டு வயதுமுள்ள இரு சிறுவர்கள் கடந்த சனிக்கிழமை பயணித்த வாகனம் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டதில் இருவரும் உயிரிழந்தனர்.

புயலால் இன்னும் சில மரணங்கள் நேர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை 500க்கும் மேலான விமானப்பயணங்களும் கடந்த சனிக்கிழமை சுமார் 400 விமானப்பயணங்களும் ரத்து செய்யப்பட்டன.

நியூ ஜெர்சியின் நியூவார்க் நகரில் 33 விமானப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, சில விமானப்பயணங்கள் பருவநிலை காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேலாகத் தாமதமாதத் தரையிறங்கின.

டென்வரில் கடந்த சனிக்கிழமை பலத்த காற்றினால் 100 விமானப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 9,000 வீடுகள் புயலின் காரணமாக மின்சாரமில்லாமல் தவிக்கின்றன.