கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதியிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் கையாடிய குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அவரைப் பிரதிநிதித்து வாதாடிய முகம்மது சஃபீ அப்துல்லா, நஜிப்புக்குத் தெரியாமலேயே மற்றவர்கள் பணத்தைக் கையாடியதாக தெரிவித்தார்.
நஜிப்பிடம் பொய்க் கணக்கு காட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமது கட்சிக்காரர் ஊழல் குற்றம் புரியவில்லை என்றும் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை என்றும் திரு சஃபீ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“அவருக்குத் தெரியாமலேயே அவரது வங்கிக் கணக்கிற்கு அந்த 42 மில்லியன் ரிங்கிட் மாற்றப்பட்டது,” என்று திரு சஃபீ தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்கிறது.