17 உயிர்களைப் பறித்து வெளியேறிய கமுரி புயல்

17 உயிர்களைப் பறித்து வெளியேறிய கமுரி புயல்

2 mins read
262b59a5-f6ea-4f2e-9dab-2c1c876f4739
பிலிப்பீன்ஸின் அல்பே மாநிலத்தின் லெகாஸ்பி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. படம்: ஏபி -

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் தென் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களைத் தாக்கிய கமுரி புயலுக்குப் பலியானோர் எண்ணி;கை 17க்கு அதிகரித்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் உயிர்ப்பலி ஏற்படாது தவிர்க்க மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடருவதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கமுரி இவ்வாண்டில் பிலிப்பீன்சைத் தாக்கி இருக்கும் 20வது புயல். திங்கட்கிழமை இரவு கடும் சீற்றத்துடன் கிளம்பிய புயல் காரணமாக அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

புயலின் தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட லுஸோன் தீவின் தென் விளிம்பில் உள்ள பிகோல் வட்டாரத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் மூவர் மண்ணில் புதைந்தனர். லுஸோனின் இதர பகுதிகளில் 11 பேரும் விசாயாஸ் பகுதியில் ஒருவரும் மாண்டதாக ராய்ட்டர்ஸ், புளூம்பெர்க் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

போலிஸ், இயற்கைப் பேரிடர் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி அவை செய்தி வெளியிட்டுள்ளன.

பிகோல், தென்மேற்கில் டகாலோக் ஆகிய வட்டாரங்களில் புயல் கோர தாண்டவமாடியதால் விவசாயத்துக்கும் விளைநிலங்களுக்கம் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. அவற்றின் மதிப்பு S$21.3 மில்லியன் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வட்டாரங்களைச் சேர்ந்த 12 சாலைகளும் மூன்று பாலங்களும் மூடப்பட்டுவிட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை மன்றத்தின் ஆக அண்மைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நிவாரண முகாம்களில் 345,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் எப்போது வீடு திரும்பலாம் என்னும் தகவலுக்காக அதிகாரிகளின் உத்தரவை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு உள்ளனர்.

புயலின் கடுமை காரணமாக தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சில பாதிக்கப்பட்டு உள்ளன.

நேற்று மாலை நிலவரப்படி புயல் காற்றின் வேகம் தணிந்து மணிக்கு 100 கி.மீ. என்று இருந்தது. ஏராளமான வீடுகளை நாசப்படுத்திய புயல் தென் சீனக் கடலை நோக்கி நகரத் தொடங்கியது.