கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் திருநீறு தொடர்பாக நடைபெற்ற விவாதம் குறித்து பிரதமர் அலுவலக அமைச்சர் வேதமூர்த்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்குக் காரணமான உறுப்பினரே தமது கருத்தை மீட்டுக்கொண்டுவிட்டதால் அதனைப் பெரிதுபடுத்தாமல் முழுமையாக அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
“நாடாளுமன்றத்தில் நடப்பவற்றை ஒட்டுமொத்த நாடே பார்த்துக்கொண்டுதான் இருக்கும்.
சம்பந்தப்பட்ட உறுப்பினர் மன்னிப்புக் கேட்டுவிட்டார். நாம் அந்தப் பிரச்சினையைக் கைவிடவேண்டும்,” என்று திரு வேதமூர்த்தி நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பு தேசிய முன்னணியைச் சேர்ந்த தாஜுதீன் அப்துல் ரஹ்மான் நேற்று முன்தினம் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி உறுப்பினர் ஆர்எஸ்என் ராயரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் தாஜுதீன் எழுந்து, “மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை உங்கள் நெற்றியில் திருநீறாகப் பூசி உள்ளீர்களா?,” என்று ராயரைப் பார்த்துக் கேட்டார்.
அதனை நேற்றுக் குறிப்பிட்ட திரு வேதமூர்த்தி இதுபோன்ற கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தி இருக்கக்கூடாது என்றார்.
“இந்துக்கள் புனிதமாகக் கருதுகிற திருநீற்றை மறைந்த ஒருவரின் சடல சாம்பலோடு ஒப்பிடுவது என்பது புண்படுத்தக்கூடிய கூற்று. அது சரியான ஒன்றாக இருக்கும் என்று நான் கருதவில்லை,” என்றார் அமைச்சர் வேதமூர்த்தி.
இந்நிலையில், சமயம் சார்ந்த அல்லது உணர்வைத் தூண்டக்கூடிய கருத்துகளைத் தவிர்க்குமாறு தேசிய முன்னணியைச் சேர்ந்த எம்.பி.க்களுக்குச் சொல்லுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அம்னோ தலைவர் அகமது ஸாஹிக் ஹமிதி கேட்டுக்கொண்டுள்ளார்.