பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மெக்ரோன் அறிவித்த ஓய்வு ஊதிய சீர்திருத்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடங்கின.
ரயில்வே ஊழியர்கள், விமான நிறுவனப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், போலிஸ் அதிகாரிகள், துப்புரவுப் பணியாளர்கள், அஞ்சலக ஊழியர்கள் என பல துறைகளையும் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய அளவில் பிரான்சில் நடக்கும் மிகப்பெரிய போராட்டம் இது. இதில் மில்லியன் கணக்கான ஊழியர்கள் கலந்துகொண்டனர். பிரெஞ்சு அதிபர் மெக்ரோன், ஓய்வு ஊதியத் திட்டத்தில் சில மாற்றங் களைக் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார். ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது, முன்னதாக வே ஓய்வு பெற விரும்புவோருக்கு சலுகைகள் குறைப்பு போன்றவை அந்த மாற்றங்களில் அடங்கும்.
இந்த உத்தேசங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்ற போதிலும் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த மாபெரும் போராட்டங்களால் பிரான்சில் கடுமையான இடையூறு கள் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முக்கியமாக ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ரயில் ஓட்டுநர்களில் 82 விழுக்காட்டினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் 90 விழுக்காடு வட்டார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாரிஸ் நகருக்கும் லண்டனுக்கும் இடையிலான திட்டமிடப்பட்ட பாதி ரயில் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் கூறின.
போக்குவரத்து சேவைகள் இன்னும் பல நாட்களுக்கு பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. பல பள்ளிகள் மூடப்படும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது வன்முறை வெடிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு பாரிஸ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்லும் வழிகளில் உள்ள கடைகள் அனைத்தையும் மூடிவைக்க கடைக்காரர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 250 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வன்முறை வெடித்தால் பலரை கைது செய்யத் தயங்க மாட்டோம் என்று பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃபி காஸ்டனர் கூறினார். நேற்று நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் மருத்துவமனை ஊழியர்களும் பங்கெடுப்பதால் மருத்துவமனைகள் எந்த அளவு பாதிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் இருப்பினும் நிலைமையை சமாளிக்க ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக சுகாதார அமைச்சர் கூறினார். பிரான்சில் பென்சன் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1995ஆம் ஆண்டு போராட்டம் நடந்தது.