மிகக் கடுங்குளிரில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் பெண்ணின் இதயத் துடிப்பு நின்று ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அவரது இதயத்தை ஸ்பெயின் மருத்துவர்கள் மீண்டும் இயங்க வைத்துள்ளனர். நேற்று (டிசம்பர் 5) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஆட்ரே மார்ஷ் எனும் அந்தப் பெண் கடந்த மாதம் மூன்றாம் தேதி சுமார் 1 மணியளவில் அவரது கணவருடன் பைரெனீஸ் மலைப்பகுதியில் நடந்துகொண்டிருந்தபோது பனிப்புயலில் சிக்கினார்.
ஆனால், மீட்புக் குழுவினர் அந்தத் தம்பதியினரை அணுகுவதற்கு சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு முன்பாக அந்த 34 வயதுப் பெண்மணியின் இதய இயக்கம் நின்றுபோனதாகவும் அவர் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் கூறப்பட்டது. அவரது உடல் வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாக இருந்தது.
அவர்களைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர் அங்கேயே மேற்கொண்ட இதய இயக்க மீட்பு சிகிச்சைகள் பலனளிக்காததால் ஒரு ஹெலிகாப்டர் மூலம் பார்சிலோனாவில் ‘இசிஎம்ஓ’ என அழைக்கப்படும் சிறப்பு ஆக்சிஜனேற்ற சவ்வு கருவி இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
நோயாளியின் இதய அமைப்புடன் இணைக்கப்பட்டதும் அவரது இதய, நுரையீரல் செயல்பாடுகளை ‘இசிஎம்ஓ’ மேற்கொள்ளும். அதன் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கப்பட்டு இரு உறுப்புகளுக்கும் ஓய்வு அளிக்கப்படும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஸ்பெயினில் அதுவரை இதய இயக்க மீட்பு சிகிச்சை யாருக்கும் அளிக்கப்பட்டிருக்கவில்லை.
‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
அதிர்ஷ்டவசமாக அவரது இதயம் இயங்கத் தொடங்கியது.
இதயத் துடிப்பு நின்றுபோன ஒருவரது இதயத்தைச் செயல்பட வைக்க ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட சிகிச்சை இது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடுங்குளிர் அவரை ‘கொன்றா’லும் குறைந்த வெப்பநிலை காரணமாக அவரது உடல் உறுப்புகளுக்கு மிகக் குறைந்த அளவே ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் தேவைப்பட்டதால் அவரது மூளை பாதுகாக்கப்பட்டது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூளை பாதிப்பு ஏதுமின்றி ஆறு நாட்களுக்குள்ளாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரணப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று கூறிய மருத்துவர்கள் அவர் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புவார் என்றனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity