வெல்லிங்டன்: நியூசிலாந்தில் உள்ள வடக்கு கைகொராவின் தேசிய நெடுஞ்சாலை 1ல் ஒரு கார், லாரி மோதிய விபத்தில் மூன்று மலேசியர்கள் கொல்லப்பட்டனர்; வேறு இருவர் படுகாயமடைந்தனர்.
நியூசிலாந்து நேரப்படி நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. விபத்தில் சிக்கியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட மற்ற விவரங்கள் தெரியாதபோதும் இறந்துபோன மூவரும் பெரியவர்கள் என்றும் காயமடைந்த இருவர் இளையர் என்றும் கூறப்பட்டது.
அவர்கள் ஐவரும் சாபாவைச் சேர்ந்த ஒரு குடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது.
படுகாயமடைந்த இரு இளையர்களும் ஹெலிகாப்டர் மூலம் கிறைஸ்ட்சர்ச் மருத்துவமனை, வெலிங்டன் மருத்துவமனை ஆகியவற்றுக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து நிகழ்ந்த சாலை மூடப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து நியூசிலாந்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் மலேசியர்கள் சிக்கியது குறித்து உறுதி செய்த விஸ்மா புத்ரா பிரதிநிதி, நியூசிலாந்துக்கான மலேசிய தூதர், சிகிச்சை பெற்று வரும் இளையர்களை விரைவில் சென்று சந்திப்பார் என்று குறிப்பிட்டார்.