மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஹாங்காங்கில் நேற்று சிவில் மனித உரிமைக் குழுவின் ஏற்பாட்டில் நடந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து பங்கேற்றனர்.
நாட்டின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து வரும் குழு, ஆறு மாதங்களாக நீடித்து வரும் அரசு எதிர்ப்பு இயக்கத்திற்குத் தன் ஆதரவைத் தெரிவிக்க இப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு அரசு ஒப்புதல் பெற்ற முதல் பேரணி இது.
பிற்பகல் 3 மணிக்குப் பேரணி தொடங்குவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு, ஹாங்காங் போலிஸ் 11 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு கைத்துப்பாக்கியையும் 105 துப்பாக்கிக் குண்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் எண்மர் ஆண்கள். எஞ்சிய மூவர் பெண்கள். 20 முதல் 63 வயதுக்கு உட்பட்ட இவர்கள், அக்டோபர் 20ஆம் தேதியன்று மொங் கொக் போலிஸ் நிலையத்தை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று போலிசார் கூறுகின்றனர்.
துப்பாக்கியைப் பயன்படுத்திப் பேரணியில் கலகத்தை ஏற்படுத்துவதே கைதானோரின் திட்டம் என்றும் அதிகாரிகளை நோக்கிச் சுடுவதோ அருகில் நிற்கும் அப்பாவி மக்களைக் காயப்படுத்தி அந்தப் பழியை அதிகாரிகளின் மீது சுமத்துவதோ கூட திட்டத்தில் அடங்கியிருக்கலாம் என்று குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார்.
துப்பாக்கியைத் தவிர கத்திகள், பட்டாக்கத்திகள், கைத்தடிகள், மிளகுநீர் கொண்ட சாதனங்கள், பட்டாசுகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டன.
பேரணியில் பங்கேற்போர் கவனமாக இருக்குமாறும் ஏதேனும் மிரட்டல் அளிக்கக்கூடிய நபர்களைக் கண்டால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் சோதனை நடவடிக்கையை அடுத்து போலிசார் பொதுமக்களுக்கு வலியுறுத்தினர்.
இன்று போக்குவரத்தைத் தடைசெய்யும் நோக்கத்துடன் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் காலை ஆறு மணிக்கே தொடங்கிவிடும் என்று கூறப்பட, அதற்கு முன்னதாக நேற்று இம்மாபெரும் பேரணி நடைபெற்றது.