தந்தை சாமிவேலுவுக்கு மனநல பரிசோதனை: வேள்பாரி மனு

தந்தை சாமிவேலுவுக்கு மனநல பரிசோதனை: வேள்பாரி மனு

2 mins read
5eb7e66e-c713-446e-841d-798c2d702111
திரு வேள்பாரி -
multi-img1 of 2

முன்னாள் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மலேசிய பொதுப்பணி அமைச்சருமான எஸ்.சாமிவேலு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா, அவரால் தம்முடைய சொந்த விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள முடியுமா என்பதைக் கண்டறியவேண்டும் எனக் கோரி, அவருடைய மகன் எஸ்.வேள்பாரி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். இம்மாதம் 2ஆம் தேதி திரு வேள்பாரி அந்த மனுவைத் தாக்கல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. "எங்களுக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை. எங்களது குடும்பத்தைப் பொறுத்தவரை, இது மிகக் கடினமான முடிவுதான்," என்று திரு வேள்பாரி சொன்னதாக 'மலேசியாகினி' செய்தி கூறியது. அம்மனுவில், 82 வயதான தம் தந்தை சாமிவேலுவை மட்டுமே பிரதிவாதியாகக் குறிப்பிட்டுள்ள திரு வேள்பாரி, அவரது மனநிலை குன்றியுள்ளதா என்பதை மனநலச் சட்டம் 2001, பிரிவு 52ன் கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தம் தந்தையின் மனநிலை எப்போது முதல் குன்றத் தொடங்கியது என்பதை அறிந்துகொள்ள விரும்பும் திரு வேள்பாரி, அது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தம் தந்தையால் அவரின் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க இயலுமா என்பதையும் கண்டறிய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். பேராசிரியர் டேவிட் ஏமெஸ், டாக்டர் பாரதி ஆகியோரின் பரிசோதனை முடிவுகள், தம் தந்தை மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறுவதாக அவர் சுட்டியுள்ளார். இரு காரணங்களுக்காக இந்த வழக்கைத் தொடுத்துள்ளதாக திரு வேள்பாரி குறிப்பிட்டார். "முதலாவதாக, அல்சைமர் நோய் காரணமாக என் தந்தை ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளதை 2017ல் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன. மீரியம் ரோசலின் எட்வர்ட் பால் என்பவர் என் மீதும் என் தந்தை மீதும் ஈப்போ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது இன்னொரு காரணம்," என்றார் திரு வேள்பாரி. ஞாபக மறதி காரணமாக தம் தந்தையால் பழைய நண்பர்களை அடையாளம் காண முடிவதில்லை என்றும் அண்மையில் நடந்தவற்றைக்கூட நினைவுகூர முடிவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால், சொந்த, நிதி விவகாரங்களை நிர்வகிக்க தம் தந்தைக்கு உதவி தேவைப்படும் எனக் குறிப்பிட்ட திரு வேள்பாரி, அவரது சொத்துகளைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாக வெளியான தகவலை அடியோடு மறுத்தார். தாம் வழக்குத் தொடுத்திருப்பது தம் தாயாருக்கும் சகோதரிக்கும் தெரியும் என்றும் அவர் சொன்னார்.