வாஷிங்டன்: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை செய்ததாக வெளியான அறிவிப்பையடுத்து, அந்நாடு ‘எல்லாவற்றையும்’ இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டேனால்ட் டிரம்ப்.
முன்னதாக வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதையடுத்து, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக வடகொரியா அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை செய்ததாக அறிவித்தது.
மேலும் அமெரிக்காவிடம் வடகொரியா மூடுவதாக உறுதியளித்த ஏவுகணை தளத்தில் இச்சோதனையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“கிம் ஜோங் உன் மிகவும் புத்திசாலி. அவர் தலைமையின் கீழ் வடகொரியா அபரிமிதமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. “ஆனால் வாக்களித்தபடி அணுவாயுத களைவைக் கொண்டு வரவேண்டும்.
“அவர் சிங்கப்பூரில் என்னுடன் ஒரு வலுவான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். “உண்மையில், அவர் விரோதப்போக்கைக் கடைபிடித்தால், எல்லாவற்றையும் இழக்க நேரிடும்,” என்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.
பியோங்யாங் மீதான ஒருதலைப்பட்ச அணுவாயுத களைவை வலியுறுத்தும் கொள்கையை இவ்வாண்டு இறுதிக்குள் மாற்றுமாறு வட கொரியா அமெரிக்காவிடம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அணுவாயுத சோதனைகள் மூலம் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை விலக்குவது குறித்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.