நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: குற்றவியல் விசாரணை தொடங்கியது

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: குற்றவியல் விசாரணை தொடங்கியது

2 mins read
4a7e5bb6-8b08-4955-a08f-e497f4757b91
அவசர மருத்துவ உதவியாளர் ஒருவரை அணைத்து நன்றி கூறும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன். படம்: ஏஎஃப்பி -

வெலிங்டன்: நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ள நிலையில், அந்த மரணங்கள் குறித்து அந்நாட்டு போலிஸ் குற்றவியல் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.

வெளிநாட்டவர்கள் உட்பட 47 பேர் நேற்று முன்தினம் 'ஒயிட் ஐலண்ட்' எரிமலையின் வாய்ப்பகுதியை ஒட்டி நடந்து சென்றபோது அந்த எரிமலை திடீரென புகையையும் சாம்பலையும் உமிழத் தொடங்கியது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலிசாரும் ராணுவத்தினரும் இணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். 39 பேர் மீட்கப் பட்ட நிலையில் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உட்பட ஐவர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று ஒருவர் மாண்டுபோனார்.

காயமடைந்த மற்ற 33 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஞ்சிய எட்டுப் பேரின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை.

இதனிடையே, சம்பவ இடத்தில் இருந்த சுற்றுப்பயணிகள் எந்த நாட்டவர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அவர்களுள் 24 பேர் ஆஸ்திரேலியர்கள். அமெரிக்கா (9), ஜெர்மனி (4), சீனா (2), நியூசிலாந்து (5), பிரிட்டன் (2), மலேசியா (1) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்தனர்.

இந்நிலையில், வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கத் தவறியதாகக் கூறி சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனம் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

அந்த எரிமலை வெடிக்கலாம் என கடந்த மாதம் எச்சரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தது ஏன் எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

மாண்டவர்களுள் மலேசியர் ஒருவர்

இதனிடையே, எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களுள் மலேசியரும் ஒருவர் என வெலிங்டனில் உள்ள மலேசியத் தூதரகம் ஃபேஸ்புக் மூலமாகத் தெரிவித்துள்ளது.