ஹாங்காங்: தொடர்ந்து நடைபெற்று வரும் ஜனநாயக சார்புப் போராட்டங்கள் ஹாங்காங் விழாக்கால விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அங்கு அடுத்த ஆறு மாதங்களில் 5,600க்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தகம் தொடர்பான வேலைகள் பறிபோகலாம் என்றும் ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் சில்லறை வர்த்தக நிர்வாக சங்கம் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகவும் 43 விழுக்காட்டினர் ஆறு மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
“பணப்புழக்கம் மேம்பாடு காணாத நிலையில் சொத்து உரிமையாளர்களும் உதவாவிட்டால், ஆட்குறைப்பும் கடைகள் மூடப்படுவதும் நிகழும்,” என்று சங்கத்தின் தலைவி திருமதி அன்னி சே நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“இது வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக இருக்கும்,” என்றார் அவர்.
4,310 கடைகளையும் 89,700 ஊழியர்களையும் உள்ளடக்கிய இந்த கருத்துக்கணிப்பிற்காக 176 சில்லறை வர்த்தகர்களிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.
ஹாங்காங்கின் பொருளியல் மந்தநிலைக்குச் சென்றுள்ளது. குறிப்பாக, சில்லறை வர்த்தகமும் சுற்றுலாத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
‘சலுகைகள் கிடையாது’
இதனிடையே, கடந்த வார இறுதியில் அமைதிப் பேரணியில் பங்கேற்ற பல நூறாயிரம் எதிர்ப்பாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மிகப் பெரிய அரசாங்க எதிர்ப்புப் பேரணிக்குப் பின்னர் நேற்று அவர் பேசினார்.
ஹாங்காங் தலைமை நிர்வாகி, அமைச்சர்கள் அனைவரும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், எதிர்ப்பாளர்களுக்கு எதிரான போலிஸ் நடவடிக்கைகள் சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பது போன்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஹாங்காங்கில் ஆறு மாதங்களாகத் தொடரும் எதிர்ப்பு அந்நகரை முடக்கியுள்ளது.
இதில், இப்போராட்டத்திற்குத் தூண்டுதலாக அமைந்த குற்றவாளிகளை சீனாவுக்கு நாடுகடத்த முன்மொழியப்பட்ட சட்டம் மட்டுமே மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என திருவாட்டி கேரி லாம் தெரிவித்தார். “மற்ற கோரிக்கைகளைப் பொறுத்தவரை, நாங்கள் சில முக்கியமான கொள்கைகளை ஒத்துச்செயல்பட வேண்டும்,” என்றார் அவர்.
“ஒரு குறிப்பிட்ட கோரிக்கையானது, சட்டத்திலிருந்து விலகிச் செல்ல வைத்தால், ஹாங்காங்கில் சட்டத்தை நிலைநிறுத்தத் தவறினால், அல்லது தலைமை நிர்வாகியின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்ய வேண்டுமானால், அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவோ, உடன்படவோ முடியாது,” என்றார் திருவாட்டி கேரி லாம்.
அமைச்சரவை மறுசீரமைப்பு தமது உடனடி பணியல்ல என்ற கேரி லாம், சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதே தமது முக்கிய பணி என்றும் கூறினார்.