ஹாங்காங்: கல்லூரித் திடல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் இரண்டைக் கண்டுபிடித்து, அவற்றைச் செயலிழக்கச் செய்துவிட்டதாக ஹாங்காங் போலிசார் தெரிவித்தனர்.
ஹாங்காங்கில் அசாதாரண அரசியல் சூழல் காணப்படும் நிலையில் அதற்கும் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று போலிஸ் விசாரித்து வருகிறது.
வான்சாய் மாவட்டத்தில் வா யான் கல்லூரியின் வாயிற்காவலர் அவற்றைக் கண்டதும் உடனடியாக போலிசுக்குத் தகவல் அளித்ததாகக் கூறப்பட்டது.
பயன்படுத்துவதற்குத் தயாரான நிலையில் அந்த வெடிகுண்டுகள் முழுமையாக உருவாக்கப்பட்டிருந்தன என்று வெடிகுண்டுச் செயலிழப்பு அதிகாரியான அலிக் வெக்விர்ட்டர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்த இரு குண்டுகளிலும் சக்திவாய்ந்த வெடிபொருள் பத்து கிலோ இருந்ததாகவும் அவற்றுடன் ஆணிகள் இணைக்கப்பட்டிருந்ததாகவும் திரு அலிக் குறிப்பிட்டார். “மக்களைக் கொல்வதும் அவர்களை ஊனமாக்குவதுமே இதன் நோக்கமாக இருக்க முடியும்,” என்றார் அவர்.
பின்னர் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் அந்த வெடிகுண்டுகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலிஸ் கருதுகிறது.