கோத்தா கினபாலு: பாலியல் ரீதியாக தன்னைச் சீரழித்தவர்களைச் சைகை மொழியால் இளம்பெண் அடையாளம் காட்டியதை அடுத்து, பதின்ம வயதினர் மூவரை மலேசிய போலிசார் கைது செய்தனர்.
செம்போர்னா மாவட்டம், ஜாலான் கலும்பாங் பகுதியைச் சேர்ந்த அந்த 18 வயது பெண்ணால் பேச முடியாது; காதும் கேட்காது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தன் மகள் வீட்டில் இல்லாததை அறிந்த அவரின் தந்தை, அவரைத் தேடினார். அப்போது வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 20 மீட்டர் தொலைவில் தன் மகள் தரையில் அமர்ந்தபடி அழுதுகொண்டிருந்ததை அவர் கண்டார்.
மகளிடம் விசாரித்தபோது தமது வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு குடிசையில் தன்னைச் சிலர் சீரழித்ததைச் சைகை மொழியில் அவர் உணர்த்தினார். இதையடுத்து, அவரின் தந்தை அந்தக் குடிசைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு சிறுவர்கள் நால்வர் இருந்ததைக் கண்டார்.
அவர்களில் மூவரை அந்தப் பெண் அடையாளம் காட்ட, பின்னர் அவரின் தந்தை போலிசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அச்சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, ஏழு நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.