மலேசியாவின் சாபா மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 882 பேர் விரைவில் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
இதை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அம்மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு மன்றம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கையில் சட்டவிரோதக் குடியேறிகளைத் தேடிப்பிடித்து கட்டம் கட்டமாக அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் பணியில் தேசிய பாதுகாப்பு மன்றம் ஈடுபட்டுள்ளது.
அவ்வகையில் நேற்று 882 பேர் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் 738 பேர் பிலிப்பினோ நாட்டையும் 119 பேர் இந்தோனீசியாவையும் சேர்ந்தவர்கள்.
மலேசியாவின் குடிநுழைவுத்துறை, சுகாதாரப் பிரிவு மற்றும் பிற அரசாங்க முகவைகள் சிறப்புப் பணிக்குழுவின் கீழ் செயல்பட்டு சட்டவிரோதக் குடியேறிகளை துடைத்தொழிக்க உதவி வருவதாக தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இயக்குநர் ஷரிஃபா சித்தி சலேஹா ஹபிப் யூசோப் தெரிவித்தார். இந்த ஆண்டில் மட்டும் 12,237 சட்டவிரோதக் குடியேறிகள் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டில் இருந்து 590,351 பேர் சாபாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர்.
சாபாவில் அகதிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட பத்திரங்களைக் கொண்டுள்ளவர்களுக்கு சாபாவில் தங்கியிருக்க தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கு மலேசிய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
அவ்வகையில் சாபாவில் ஏதேனும் ஓர் அடையாளப் பத்திரத்துடன் தங்கியிருக்கும் ஏறக்குறைய 600,000 வெளிநாட்டினருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிகிறது.