ஜகார்த்தா: இந்தோனீசியாவின் காட்டுத் தீயால் இந்த ஆண்டில் மட்டும் குறைந்தது 5.2 பி. அமெரிக்கன் டாலர் பொருளியல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது நாட்டின் மொத்த வருமானத்தின் 0.5 விழுக்காடு என்றும் உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையில் இந்தோனீசியாவின் எட்டு மாநிலங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்ததாக உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
காட்டுத் தீ சம்பவங்களால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் US$157 மில்லியன் மதிப்புள்ள சொத்துகள் நேரடியாக சேதமடைந்தன என்றும் அதனால் பொருளியல் ரீதியாக US$5 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என உலக வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புகைமூட்டத்தால் இந்தோனீசியாவில் அதன் அண்டை நாடுகளிலும் ஏறக்குறைய 900,000 பேர் மூச்சுத்திணறல் நோய்க்கு ஆளாயினர். இந்தோனீசியாவில் 12 விமான நிலையங்களில் விமானச் சேவைகள் முடங்கின. மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் இந்தோனீசியாவிலும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
கடந்த செப்டம்பரில் புகைமூட்டப் பிரச்சினை காரணமாக இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான அரச தந்திர உறவில் சற்று உரசல் ஏற்பட்டது.
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 942,000 ஹெக்டேர்ஸ் பரப்புள்ள காடுகள் எரிக்கப்பட்டன. காட்டுத் தீ சம்பவங்களால் இந்த ஆண்டின் இந்தோனீசியாவின் உள்நாட்டு மொத்த வருவாய் 0.09 விழுக்காடு குறையும் என்றும் அடுத்த ஆண்டு 0.05 விழுக்காடு குறையும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.