ஹாங்காங்கில் கடந்த மாதம் நடுப்பகுதியில் அரசாங்க ஆதரவு, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் செங்கல்லால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் தொடர்பில் பதின்ம வயது இளையர்கள் ஐவரை ஹாங்காங் போலிசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மேல் விசாரணைக்காக அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இரு பிரிவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காணொளியாக பதிவாகியிருந்தது.
ஒருவர் மீது மற்றொருவர் செங்கற்களை வீசியபோது அதில் காயம் அடைந்த 70 வயது முதியவர் ஒருவர் தரையில் விழுந்தார்.
சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் உயிரிழந்தார்.
ஒரே வாரத்தில் ஆர்ப்பாட்டம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்த இரண்டாவது ஆள் அவர்.
அதற்கு முன்னதாக, பலமாடி கார் நிறுத்துமிடத்தில் போலிசாருக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது உயரத்திலிருந்து கீழே விழுந்த 22 வயது பல்கலைக்கழக மாணவர் அலெக்ஸ் சாவ் கடந்த மாதம் 8ஆம் தேதி உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவத்தில் மூவர் கைது
இதற்கிடையே, ஆர்ப்பாட்டங்களில் பயன்படுத்துவதற்காக நாட்டு வெடிமருந்துகளைப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்களை ஹாங்காங் போலிசார் நேற்று கைது செய்தனர்.
ஆணிகள் வைக்கப்பட்ட இரு நாட்டு வெடிமருந்துகள் செயல் இழக்கப்பட்டதாக போலிஸ் கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தனர். போலிசாரைத் தாக்குவதற்காக அந்த வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஹாங்காங்கில் நிலவும் அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் நேற்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூர் தேர்தலில் கேரி லாம்முடைய அரசாங்கம் மோசமான தோல்வியைத் தழுவியதையடுத்து, பெய்ஜிங்கிற்கு அவர் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதன்முறை.
பெய்ஜிங்கிற்கு திருவாட்டி லாம் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது தலைமைத்துவக் குழுவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது.
திருவாட்டி லாம்மின் நான்கு நாள் பயணத்தின்போது பெய்ஜிங் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அவர் நாளை சந்திப்பார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஹாங்காங்கில் பல்வேறு சமுதாய விவகாரங்களுக்கு தீர்வு காண முற்படாத திருவாட்டி லாம்மின் அரசாங்கம் மீது ஏராளமான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்குப் பதிலாக ஹாங்காங்கில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதே தமது முதல் பணி என்று இவ்வார தொடக்கத்தில் திருவாட்டி லாம் சூளுரைத்து இருந்தார்.