பெய்ஜிங்: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு சீனா திட்டமிட்டிருந்த கூடுதல் வரி விதிப்பை தற்போது நிறுத்திவைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
கூடுதல் வரி விதிப்பு நேற்று நடப்புக்கு வரவிருந்த நிலையில் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீடிக்கும் வர்த்தகப் பூசலை முடிவுக்குக்கொண்டுவர இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவ்விரு நாடுகளுக்கும் இடையில் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சீனாவின் சுங்கத்துறை வரிவிதிப்பு ஆணையம், சில அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படவிருந்த கூடுதல் வரியை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
சீனா முன்னதாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோளம், கோதுமை போன்ற தானிய வகையிலிருந்து அமெரிக்காவில் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் இந்த புதிய வரி விதிப்பை நேற்று (டிசம்பர் 15ஆம் தேதி) நடப்புக்கு கொண்டுவரவும் திட்டமிட்டிருந்தது.
ஏற்கெனவே அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்துள்ள வரி விதிப்பு தொடர்ந்து நடப்பில் இருப்பதாகவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பதற்றம் தணிய சரிசமம், பரஸ்பர மரியாதை இவற்றின் அடிப்படையில் அமெரிக்காவுடன் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இருநாட்டு வர்த்தக உறவு மேம்படும் என்றும் சீனா நம்பிக்கை கொண்டிருப்பதாக சீன சுங்கத்துறை ஆணையம் தெரி வித்தது.
முன்னதாக அமெரிக்காவும் சீனப் பொருட்களுக்கு விதிக்கப்படவிருந்த 15 விழுக்காடு வரியை நிறுத்திவைக்கவும் சில வரிகளை குறைக்கவும் ஒப்புதல் தெரிவித் திருந்தது.
அமெரிக்காவின் அந்த நடவடிக்கைக்கு பிரதிபலனாக அமெரிக்காவிலிருந்து பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பண்ணைப் பொருட்களையும் மேலும் சில பொருட்களையும் வாங்க சீனா முன்வந்துள்ளது.
அடுத்த ஈராண்டுகளில் அமெரிக்காவிலிருந்து கூடுதலாக 200 பில்லியன் அமெரிக்க டாலர் (S$270 பில்லியன்) மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய சீனா இணங்கியுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பேராளர் ஒருவர் கூறினார். முன்னதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனா நியாயமற்ற வர்த்தக நடை முறைகளைப் பின்பற்றி வருவ தாகவும் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளையும் தொழில் நுட்பங்களையும் திருடி வருவதாகவும் குற்றம்சாட்டி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்தார்.
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதித்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்தி வந்தன. இந்த வர்த்தகப் பூசல் உலகளாவிய பொருளியலை பெரிதும் பாதிக்கும் என்று அஞ்சப்பட்டது.
இந்நிலையில் இந்த வர்த்தக பூசலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டுள்ளது.