பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் அதிபரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான ஜெனரல் பர்வேஷ் முஷாரஃபிற்கு (படம்) தேசத் துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்துள்ளது.
முஷாரஃப் 2007ஆம் ஆண்டு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி தேசத் துரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
நவாஸ் ஷெரிஃபின் முஸ்லிம் லீக் 2003ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முஷாரஃப் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஆறு ஆண்டுகளுக்கு நடைபெற்றது.
பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறி செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷாரஃப் ஆவார்.
நீதிபதி வாகர் சேத் தலை மையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை நேற்று விதித்தது. இரண்டு நீதிபதிகள் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார்.
முஷாரஃப் ஒரே ஒரு முறைதான் இந்த வழக்கின் விசாரணைக்கு வந்தார்.
தேசத் துரோக வழக்கில் முஷாரஃப் மீது குற்றம்சாட்டப்பட்டபோது அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. மேலும் அவர் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக முஷாரஃப் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், மேல்முறையீடு செய்ய வேண்டுமானால் அவர் பாகிஸ்தானுக்கு நாடு திரும்பி நீதிமன்றத்துக்கு நேரடியாக வர வேண்டும். பாகிஸ்தானில் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் முயற்சியாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் எந்த ஒரு ராணுவத் தளபதியும் இம்மாதிரியாக செயல்படுவதைத் தடுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity