இலங்கையின் முன்னாள் அமைச்சர் கைது

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கைது

1 mins read
a3ce48b9-47a4-4b28-9d5f-feace0dadacc
2016ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

இலங்கையின் முன்னாள் நகர மேம்பாட்டு அமைச்சரான சம்பிக்க ரணவக்க நேற்று கைது செய்யப்பட்டார்.

2016ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த விபத்தில் இளையர் ஒருவர் படுகாயம் அடைந்ததாக இலங்கை ஊடகம் தெரிவித்தது.

ரணவக்க கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டி விபத்து விளைவித்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்து நிகழ்ந்த பிறகு மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேறொருவர் குற்றத்தை ஏற்க அவர் ஏற்பாடு செய்ததாக நம்பப்படுகிறது என இலங்கை அதிகாரிகள் கூறினர்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அந்த விபத்துக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக ரணவக்க தெரிவித்தார்.

விபத்து ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தைத் தமது ஓட்டுநர் செலுத்திவிட்டதாக ரணவக்க தெரிவித்தார்.

ஆனால் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான புதிய அரசாங்கம் அரசியல் ரீதியில் தம்மைப் பழிவாங்கவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கிறது என்று ரணவக்க தெரிவித்தார்.

கோத்தபயவின் சகோதரர் மகிந்த ராஜபக்சேவின் அரசாங்கத்தில் ரணவக்க அமைச்சராக இருந்தார்.

2014ஆம் ஆண்டில் ரணவக்க விலகியதால் மகிந்தவின் அரசாங்கம் கவிழ்ந்தது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்