சிட்னியில் பற்றி எரியும் புதர்த் தீ சம்பவத்தின் தொடர்பில் இரு உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பரவு தீயால் கோபத்தில் மக்கள் கொதித்துப்போயிருக்கும் நிலையில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த விடுமுறைப் பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார் அவர்.
மூர்க்கமாகப் பரவி வரும் புதர்த்தீயால் பல்வேறு ஆஸ்திரேலிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் நான் குடும்பத்துடன் விடுமுறையில் சென்றதற்காக பெரிதும் வருந்துகிறேன் என்று திரு மோரிசன் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கரும்புகையுடன் விண்ணை நோக்கி ஆக்ரோஷமாக எழுந்து எரியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொண்டூழியமாக தீயணைப்பில் ஈடுபட்டு வந்த ஜெஃப்ரி கியட்டோன், ஆண்ட்ரூ ஓ'டையர் ஆகிய இருவர் நேற்று (டிசம்பர் 19) நிகழ்ந்த விபத்தில் மாண்டனர்.
தெற்கு சிட்னியில் தீயணைப்பு வாகனம் ஒன்று மரத்தில் மோதி உருண்டு விழுந்ததில் வாகனத்தை ஓட்டியவரும் முன் இருக்கையில் பயணம் செய்தவரும் உயிரிழந்ததாகவும் மூவர் காயமுற்றதாகவும் போலிசார் தெரிவித்தனர்.
தீப்பிடித்து பரவி வரும் இந்த இக்கட்டான நிலையில் நிகழ்ந்திருக்கும் உயிரிழப்புகள் நிலைமையை மோசமடையச் செய்திருப்பதாக புறநகர் தீயணப்புச் சேவை நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடுமையான காற்றால் பரவிய புதர்த் தீ மூன்று தீயணைப்பாளர்களைப் பதம் பார்த்தது.
அவர்களில் இருவர் ஆடவர். முகம், கை, கால்களில் ஏற்பட்ட தீப்புண்களுக்காக அவ்விருவரும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பெண் தீயணைப்பாளர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில் தீயில் சிக்கிய இருவர் கோமா நிலையில் உள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity