ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 100க்கும் அதிகமான இடங்களில் புதர்த்தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், அம்மாநிலம் முழுவதும் அதிகாரிகள் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிறிஸ்மஸ், புத்தாண்டு நெருங்கும் வேளையில், பயணங்களை ஒத்திவைக்குமாறு பயணிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கும் மேல் அதிகரித்திருப்பதாலும் பலத்த காற்று வீசுவதாலும் நேற்று பல பகுதிகளில் புதர்த்தீச்சம்பவங்கள் மோசமடைந்தன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துடன் விக்டோரியா, சவுத் ஆஸ்திரேலியா ஆகிய இரு மாநிலங்களும் புதர்த்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிட்னி நகரத்தைச் சுற்றி மூன்று இடங்களில் அபாயகரமான அளவில் நேற்று புதர்த்தீ பற்றி எரிந்தது. “தீச்சம்பவம் ஏற்பட்டுள்ள பகுதிகள் அருகில் உள்ள சாலைகளில் அத்தியாவசிய தேவை இருந்தாலொழிய பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என நியூ சவுத் வேல்ஸ் முதல்அமைச்சர் கிலேடி பெரிஜிக்லியான் கூறினார்.
புதர்த்தீயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 10,000 அவசரகாலப் படையினர் பணியில் ஈடுபட்டனர். “மிகுந்த வறட்சியான காலகட்டத்தை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஒரு சில பகுதிகளில் 12 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை. கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகும் புதர்த்தீ பரவும் என அஞ்சப்படுகிறது,” என நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்புச் சேவை கண்காணிப்பாளர் பென் ஷெப்பர்ட் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சிட்னி அருகே தொண்டூழிய தீயணைப்பில் ஈடுபட்டு வந்த இருவர் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்து ஒன்றில் உயிரிழந்தனர். இதுவரையில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாகவும் 700 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.