சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் புதர்த் தீ கொழுந்துவிட்டு எரியும் வேளையில் தற்போது காணப்படும் குளிரான பருவநிலை தீயணைப்பாளர்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத் திருப்பதாகக் கூறப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் சிட்னி நகரைச் சுற்றியுள்ள இரு இடங்களிலும் வேகமாகப் பரவி வரும் புதர்த் தீயை அணைக்க இரவு பகலாக போராடி வரும் தீயணைப்பாளர்களுக்கு தற்போதைய பருவநிலை தற்காலிக நிம்மதியைக் கொடுத்துள்ளது என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறினர்.
இருப்பினும் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யாது என்றும் வெப்ப அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் பெரும் சவாலை தீயணைப்பாளர்கள் எதிர் நோக்கியிருப்பதாகத் தெரிகிறது.
கடும் வறட்சி காரணமாகவும் புவி வெப்பம் அதிகரித்ததாலும் ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கடந்த செப்டம்பர் மாதம் முதல் கொழுந்துவிட்டு எரிகிறது. காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 700 வீடுகள் நாசமானதாகவும் பல ஏக்கர் நிலம் பாழானதாகவும் அதிகாரிகள் கூறினர். தெற்கு ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை புதர்த் தீக்கு ஒருவர் பலியானார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது ஹவாயி பயணத்தை சுருக்கிக் கொண்டு அவசரமாக நாடு திரும்பினார்.
ஊரே பற்றி எரியும் வேளையில் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைப் பயணம் சென்றிருந்ததற்காக திரு மோரிசன் ஆஸ்திரேலிய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
“காட்டுத் தீ குறித்து மக்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கும்போது நான் குடும்பத்துடன் சுற்றுலா சென்றதை அறிந்து அவர்கள் அதிருப்தி அடைந்திருந்ததை தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்று மோரிசன் தெரிவித்தார்.
“ஆனால், நம்முடைய அவசரகால மேலாண்மை குழு உலகத்திலேயே சிறந்த ஒன்று,” என்று அவர் சொன்னார். திரு மோரிசன் பின்னர் தீயணைப்புப் படை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை தீயணைப்புப் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புப் படை வீரர்கள் இருவருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் மைக்கல் மெக்கோர்மேக், காட்டுத் தீயை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினார். புவி வெப்பம் அடைவதைத் சமாளிக்க மோரிசன் தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்று ஆஸ்திரேலியர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.