ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் புதர்த்தீ மளமளவென பரவி வரும் வேளையில், ஹவாயித் தீவில் தமது குடும்பத்தினருடன் உல்லாசமாக விடுமுறையைக் கழித்த அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் பதவி விலகக் கூறும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
நாட்டில் நிலைமை மோசமாக இருந்தும் விடுமுறையைக் கழிக்க ஹவாயித் தீவுக்குத் தாம் சென்றிருந்ததற்காக நாடு திரும்பிய பிறகு ஆஸ்திரேலிய மக்களிடம் திரு மோரிசன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். எனினும், அவரது விளக்கத்தைக் கேட்க மக்கள் தயாராக இருப்பதாக தெரியவில்லை.
நாட்டில் நெருக்கடி நிலை நிலவி வரும் வேளையில், சமூக ஊடகங்களில் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது நாட்டு மக்கள் முன்வைக்கும் புகார்.
‘மோரிசன் எனது பிரதமர் இல்லை’, ‘மோரிசன் பதவி விலக வேண்டும்’ உள்ளிட்ட ‘ஹேஷ்டேக்கு’களைக் கொண்ட பதிவுகள் டுவிட்டரில் நேற்று வெள்ளமெனத் திரண்டன.
நாட்டின் சவுத் ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதர்த்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நகரமான சிட்னியைப் புதர்த்தீ பதம் பார்த்தது. புதர்த்தீயால் வெளியான கரும்புகை பல நாட்களாக சிட்னியைச் சூழ்ந்திருந்தது.
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த தவறும் ஆஸ்திரேலிய அரசுக்கு மக்கள் நெருக்குதல் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, விழாக்காலத்தில் புதர்த்தீயை அணைக்க கடுமையாகப் போராடி வரும் பொதுச் சேவை ஊழியர்களுக்கும் தொண்டூழியர்
களுக்கும் ‘அலவன்ஸ்’ தொகை வழங்க பிரதமர் மோரிசன் உறுதி தெரிவித்துள்ளார்.
“தீயணைப்பு வீரர்கள் ஊக்கத்துடன் பணியைச் செய்யவேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்,” என்றார் அவர்.
புதர்த்தீயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் கிட்டத்தட்ட 23 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருப்பதாக திரு மோரிசன் தெரிவித்தார்.