இந்தோனீசியாவின் தெற்கு சுமத்ரா மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று 150 அடி பள்ளத்தில் விழுந்து, ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 25 பேர் மாண்டுவிட்டனர்; 14 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து நேற்று நள்ளிரவு நிகழ்ந்தது. மீட்புப் பணி தொடர்வதாகவும் பேருந்து விழுந்த ஆற்றுப்பகுதியில் வேறு எவரும் உள்ளனரா என்று முக்குளிப்பாளர்கள் தேடி வருவதாகவும் உள்ளூர் தேடி மீட்கும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
மாண்டோரின் உடல்கள் ஆற்றிலிருந்து தூக்குப் படுக்கை மூலம் மீட்கப்பட்டதைப் படங்கள் காட்டின. மேலும் பலரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது. சாலை ஓரத்திலிருந்த கான்கிரீட் தடுப்பில் மோதி, பின் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததாகவும் இன்னும் சில பயணிகள் பேருந்துக்குள் சிக்கி உள்ளதாகவும் உள்ளூர் போலிஸ் பேச்சாளர் கூறினார். அந்தப் பேருந்தில் 50 பேர் வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது.