மத்திய ஆசிய நாடான கஸக்ஸ்தானில் அல்மாட்டி நகரிலிருந்து இன்று காலை புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
அல்மாட்டி விமான நிலையத்திலிருந்து இன்று காலை ‘பெக்ஏர் ஜெட்’ பயணிகள் விமானம் தலைநகர் நூர்-சுல்தானை நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் 95 பயணிகளும் ஐந்து விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழந்தது. விமான நிலையம் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் விமானத்தின் பாகங்கள் துண்டுகளாக நொருங்கின. விமானம் மோதிய அந்தக் கட்டடமும் சேதமடைந்தது.
விபத்தைத் தொடர்ந்து அவசரகால மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்த பலர் உடனடியாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கஸக்ஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், இது குறித்து விரிவான விசாரணைக்கு கஸக்ஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
விசாரணை முடிவடையும் வரை, விபத்துக்குள்ளான விமான ரகம் தொடர்பான அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துக் குழு கூறியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் 1996ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாகவும் அதன் ஆக அண்மைய தரச் சான்றிதழ் இவ்வாண்டு மே மாதம்தான் வழங்கப்பட்டிருந்ததாகவும் கஸக்ஸ்தான் அரசு தெரிவித்தது.