ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை உலுக்கி வரும் காட்டுத்தீயின் காரணமாக சிட்னி நகரின் தண்ணீர் கட்டமைப்பு பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நகரமான சிட்னியில் உள்ள தண்ணீர் ஆலைகள், நீரேற்று நிலையங்கள், தண்ணீர்க் குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் அந்நாட்டின் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெப்பநிலை அடுத்த வாரம் 40 டிகிரி செல்சியசை எட்டக்
கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதனால் காட்டுத்தீ மோசம் அடையும் சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிலும், சிட்னியில் வசிக்கும் ஐந்து மில்லியன் மக்களுக்குத் தேவையான தண்ணீரில் 80 விழுக்காட்டை வழங்கும் வரகம்பா அணைக்கட்டுக்கு அருகில் காட்டுத்தீ பரவக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
வரகம்பா அணைக்கட்டு சிட்னியிலிருந்து 65 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
மலைப்பகுதிகளிலிருந்து வழிந்தோடும் ஆற்றுநீர் அதில் தேங்குகிறது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியைத் தொடர்ந்து வாட்டி வரும் வறட்சியால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பி இருந்த வரகம்பா அணைக்கட்டு தற்போது 44.8 விழுக்காடு அளவு தண்ணீர் மட்டுமே கொண்டுள்ளது.
கடந்த பல வாரங்களாகக் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்தபோதிலும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தண்ணீர் கட்டமைப்பு சேதமடையவில்லை என்று அந்த மாநில அரசாங்கத்தின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காட்டுத்தீ காரணமாக இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.