புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை மழை கொட்டித் தீர்த்ததால் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. கடந்த ஏழாண்டுகளில் இதுவே ஆக மோசமான வெள்ளம் எனக் கூறப்படுகிறது.
இந்த வெள்ளம் காரணமாக குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களை நாடினர்.
முன்னெச்சரிக்கையாக ஜகார்த்தாவின் 724 பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
ரயில் தண்டவாளங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் ரயில்கள் தாமதமாகச் சென்றன. ஓடுபாதை நீரில் மூழ்கியதால் கிழக்கு ஜகார்த்தாவிலுள்ள ஹலிம் பெர்டனகுசுமா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், நாடு முழுவதும் வெள்ளத் தணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்னும் மூன்று நாட்களுக்கு அங்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.