ஹாங்காங்: புத்தாண்டை ஹாங்காங் தனது வழக்கமான முறையிலேயே வரவேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. போராட்டம், கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு, தீச்சம்பவங்கள், சொத்துச் சேதம், சாலைத் தடுப்புகள் என ஹாங்காங் மக்கள் ஜனநாயக உரிமைகள் வேண்டியும் சீனாவின் அதீதக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட வேண்டியும் போராடி வருவதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
ஹாங்காங்கின் வர்த்தகப் பகுதியில் திரளான கூட்டம் கூடி போராட்டம் நடத்தியதாகவும் முதலில் அமைதியான முறையில் பேரணியாகச் சென்றதாகவும் திடீரென எச்எஸ்பிசி வங்கியின் கிளை ஒன்றுக்கு அருகே வந்ததும் வன்முறை வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நிலையில் போராட்டக்காரர்களை எதிர்கொண்ட கலகத் தடுப்பு போலிசார் பேரணியைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
நேற்றுக் காலை ஹாங்காங் நகர வீதிகள் பெரும்பாலும் வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், சில போக்குவரத்து சாலை சமிக்ஞை விளக்குகளும், தானியங்கி வங்கி ரொக்க நிலையங்களும் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்றதாகக் கூறியபோதிலும் பேரணி தொடங்கிய விக்டோரியா பார்க் பகுதியில் கிட்டத்தட்ட 60,000 பேர் திரண்டதாக போலிசார் மதிப்பிட்டனர்.
வங்கிக் கிளை ஒன்று சேதப்படுத்தப்பட்டதாலும் பேரணியில் கலந்துகொண்டோர் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தியதாலும் பேரணியைக் கலைக்க நடவடிக்கை மேற்கெண்டதாக போலிசார் விளக்கினர்.
அத்துடன் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர்.
சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியது, தாக்கக்கூடிய ஆயுதங்கள் வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
“உலகின் மற்ற நாட்டு மக்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் போல் அல்லாது இங்கு சாலைகளில் கூடி நமது கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டுமென நாம் கோருகிறோம்.
“இதுபோல் மாதா மாதம், ஆண்டுக்கு ஆண்டு நாம் போராடுவோம்.
“எனெனில் இது எங்களைப் பற்றியது அல்ல, எங்கள் பிள்ளைகளின் நலன் பற்றியது.
“இது எங்கள் இல்லம். இந்தப் போராட்டத்தை நாங்கள் விட்டுக்கொடுப்பதாக இல்லை.
“சீனாவுக்கு எதிராகவும் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியுள்ளது,” என சாரா என்ற 28 வயது மாது கூறியதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.