ஆஸ்திரேலியாவில் கொளுந்துவிட்டெரியும் புதர்த்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயின் நீத்த தொண்டூழியரான 32 வயது ஜெஃப்ரி கீட்டனின் இறுதிச் சடங்கின்போது அவரது 19 மாதக் குழந்தைக்கு, சேவைகளுக்கு வழங்கப்படும் ஆக உயரிய கௌரவம் வழங்கப்பட்டது. தந்தையின் சார்பில் ஹார்வி கீட்டன் எனும் 19 மாதக் குழந்தை அதைப் பெற்றுக்கொண்டது.
வாயில் பிளாஸ்டிக் ‘பேசிஃபையரை’ வைத்தபடி அமைதியாக நின்றிருந்த அந்தக் குழந்தையின் சட்டையில் நியூ சவுத் வேல்ஸ் மாநில ராயல் தீயணைப்பு சேவையின் ஆணையர் கிரெய்க் ஃபிட்ஸிம்மன்ஸ் குழந்தையின் முன்பு மண்டியிட்டு பாராட்டு வில்லையைக் குத்தியது பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
அண்மைய வாரங்களில் தீயணைப்பில் ஈடுபட்டு பலியான மூன்று தொண்டூழிய தீயணைப்பாளர்களில் ஜெஃப்ரி கீட்டோனும் ஒருவர்.
திரு கீட்டனும் அவருடன் பணியாற்றிய மற்றொரு தொண்டூழியரும் கடந்த மாதம் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தீப்பற்றிய மரம் ஒன்று அவர்களது தீயணைப்பு வாகனத்தின் மீது விழுந்ததையடுத்து, வாகனம் உருண்டதில் அவ்விருவரும் உயிரிழந்தனர்.
இந்த வாரத்தில் ‘தீச் சூறாவளி’யில் சிக்கி மூன்றாவது தொண்டூழியர் உயிரிழந்தார்.
திரு கீட்டனின் பூத உடலைத் தாங்கிய வாகனம் சிட்னி மயானத்துக்குள் நுழைந்தபோது பல தீயணைப்பு வீரர்கள் அணிவகுத்து மரியாதை செய்ததைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்தன.
கடந்த திங்கட்கிழமை முதல் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா பகுதிகளில் எண்மர் தீக்கு இரையாகினர், 18 பேரைக் காணவில்லை.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity