ஹாங்காங்: சீனாவிற்குச் சென்று திரும்பும் பயணிகளால் பரவும் மர்மமான சளிக்காய்ச்சல் தொற்றுநோயைப் பற்றிய அச்சங்கள் நிலவுவதால், ஹாங்காங் அதிகாரிகள் தீவிரமான புதிய பரிசோதனை முறையை நடைமுறைபடுத்தியுள்ளனர்.
இந்த சளிக்காய்ச்சல் தொற்றால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக ஹாங்காங் கூறுகிறது.
ஹாங்காங்கில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீனாவின் வூஹான் நகரில் இதுவரை 44 பேர் இந்த சளிக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் பரவத் தொடங்கிய இந்த சளிக்காய்ச்சல், 2002-2003ல் தெற்கு சீனாவிலிருந்து பரவத் தொடங்கி, ஹாங்காங் மற்றும் பல உலக நாடுகளில் 700 பேரைப் பலிவாங்கியதை நினைவூட்டுவதாக இருந்தது.
காரணம் தெரியாத தொற்றுநோய்களுக்கு எதிராக சனிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த புதிய தீவிரமான பதில் நடவடிக்கை திட்டம் மூன்று அடுக்கு அமைப்பில் இரண்டாவது அதிகபட்சமாகும்.
இதன்படி ஹாங்காங்கிற்கும் அந்நாட்டின் விமான நிலையத்திற்கும் வரும் பயணிகளின் உடல் வெப்பநிலையைச் பரிசோதிக்க, அந்நாட்டு சுகாதாரத் துறை ‘தெர்மல் இமேஜிங் சிஸ்டம்’ எனப்படும் வெப்ப ஊடுகதிர் சோதனை முறையை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஹாங்காங்கை சீனாவுடன் இணைக்கும் மேற்கு கவுலூன் அதிவேக ரயில் நிலையத்தில் வெப்பநிலை சோதனைகளுக்காக அதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுவாச பிரச்சினை அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் முகக்கவசம் அணியுமாறும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக கவுலூன் ரயில் நிலையத்திற்கு சென்ற ஹாங்காங் தலைவர் கேரி லாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை நிலவரப்படி சளிக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 44 பேரில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வூஹான் சுகா தாரத் துறை தெரிவித்துள்ளது.
சளிக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்த 121 பேரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சீன கூறியுள்ளது.
சீனாவின் வூஹானில் இருந்து வரும் பயணிகளுக்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்னாம் உள்ளிட்ட நாடுகளும் உடல் வெப்பநிலை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.