ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட ஆக மோசமான இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பெருஞ்சேதங்களால் சுமார் 175,000 பேர் தங்கள் வசிப்பிடங்களை இழந்து தவிப்பதாக இந்தோனீசிய பேரிடர் மீட்பு குழுவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பெருஞ்சேதத்தால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி, புத்தாண்டு நாளின் அதிகாலையில் பலத்த மழை பெய்ததால் ஜகார்த்தா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளநீரில் மூழ்கியது.
1866ஆம் ஆண்டில் மழை குறித்து பதிவுகள் தொடங்கியதிலிருந்து ‘மிக அதிக மழை இது’ என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பருவநிலை மாற்றம் தீவிர வானிலை அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும் பிப்ரவரி மாதத்தின் மத்திமம் வரை அதிக மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக ஜனவரி 11-15 வரை உச்சகட்ட மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே, மழை, வெள்ளத்திற்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணண் அனுப்பியுள்ள செய்தியில், “இந்த காலகட்டத்தில் இந்தோனீசியாவுடன் சிங்கப்பூர் ஒன்றிணைந்து நிற்கிறது.
“இந்தோனீசிய அரசாங்கம் நிவாரண முயற்சிகளை முறையாக நிர்வகிக்கும் என்றும் பாதிக்கப்பட்ட இடங்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் நான் நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கப்பூரர்கள் உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கேட்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு கூறியது.