சுவீடன் நாட்டைச் சேர்ந்த தளவாடப் பொருள் விற்பனை நிறுவனமான ‘இக்கியா’, அதன் தயாரிப்பான அறைகலன்களில் ஒன்று விழுந்து கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை உயிரிழந்ததற்கு இழப்பீடாக 46 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ($62 மில்லியன்) வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
மிகவும் பிரபலமான அந்தவகை அறைகலனின் தொடர்பில் மேலும் ஐந்து குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, அந்த வகை அறைகலை அந்நிறுவனம் மீட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் பலியான கலிஃபோர்னிய சிறுவன் ஜோஸஃபின் பெற்றோர் ஜொலீன், கிரெய்க் டுடெக் தொடுத்த வழக்கின் தொடர்பிலான இந்தத் தீர்வை அவர்களது வழக்கறிஞர் நேற்று (ஜனவரி 6) அறிவித்தார். ‘இக்கியா’ நிறுவனத்தின் பேச்சாளரும் அதனை உறுதி செய்தார்.
அந்நிறுவனத்தின் அறைகலன் மேலே விழுந்ததால் உயிரிழந்த மேலும் மூன்று பிள்ளைகளின் பெற்றோருக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க கடந்த 2016ல் ‘இக்கியா’ ஒப்புக்கொண்டது.
‘இக்கியா’வின் வட அமெரிக்கத் தலைமையகம் இருக்கும் பெனிசில்வேனியாவில் உள்ள நீதிமன்றத்தில் டுடெக் தம்பதி 2017ல் வழக்குத் தொடுத்தனர். ‘மால்ம்’ ரக அறைகலன்கள் கவிழும் அபாயம் இருப்பது அந்த நிறுவனத்துக்குத் தெரிந்திருந்தும் அதன் நிலைத்தன்மையற்ற வடிவமைப்பு பற்றி வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் எச்சரிக்கவில்லை என்று டுடெக் தரப்பில் வாதிடப்பட்டது.
அத்தகைய அறைகலனை டுடெக் தம்பதி 2008ஆம் ஆண்டில் வாங்கினர். ஆனால், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அத்தகைய அறைகலன்களை ‘இக்கியா மீட்டுக்கொள்வதற்கு முன்பு, அத்தகைய அறைகலனை வாங்கிய மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அந்த அறைகலன்களை சுவருடன் பொருத்தும் சேவையை அது வழங்கியது.
ஆனால், ‘மால்ம்’ ரக அறைகலன்கள் மீட்டுக்கொள்வதைப்பற்றி தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று டுடெக் தரப்பில் கூறப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி, திரு டுடெக் தம் மகன் ஜோஸஃப் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது, சுமார் 32 கிலோ எடையுள்ள அந்த அறைகலன் அவன் மீது விழுந்து கிடந்ததைக் கண்டார். மூச்சுத் திணறலால் அந்தச் சிறுவன் பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது ஜோஸஃபினுக்கு வயது இரண்டு.
‘மால்ம்’ ரக அறைகலனால் மேலும் 91 குழந்தைகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இழப்பீடாகப் பெறும் தொகையிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை மூன்று பயனாளர் பொருட்கள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றனர் டுடெக் தம்பதியினர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity