தோள்பை தொலைந்த 15 நிமிடங்களில் ஆடவர் ஒருவரின் வங்கிஅட்டை மூலம் 20,000 மலேசிய ரிங்கிட் தொகை திருடப்பட்டுள்ளது.
தொழிலதிபரான லாம் கோக் குவென் உணவகம் ஒன்றில் இருந்து வெளியேறும்போது தன் நான்கு ஏடிஎம் அட்டைகள் உள்ளிட்டவை அடங்கிய தனது தோள்பையை தவறவிட்டுவிட்டார்.
அதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த உணவகத்திற்கு வந்த அவர் தனது பை இல்லாததைக் கண்டு அதிர்ந்தார்.
என்றாலும், முதல் நடவடிக்கையாக வங்கிகளில் தெரிவித்து தனது வங்கி அட்டையை ரத்து செய்தார். ஆனால் அதற்குள் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 20,000 ரிங்கட் களவாடப்பட்டுவிட்டது.
ஈப்போவில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் லாம், தனது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் உணவகத்தின் மாத செலவுக்காகவும் தான் அந்த பணத்தை வைத்திருந்ததாகச் சொன்னார்.
இ-வாலட் மூலம் நான்கு பரிவர்த்தனைகளாக பணம் களவாடப்பட்டிருப்பதாக வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"வங்கிக்குச் சென்று நேரடியாக பணம் எடுத்தபோது, என் கணக்கில் பணம் குறைந்திருப்பது கண்டு அதிர்ந்தேன்.
"இணைய வழி பரிமாற்றம் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும் அதில் பல ஆபத்துகள் உள்ளன.
"எனவே, பணம் எடுக்கும், மாற்றுவதற்கான வரம்புகளை நாம் குறைவாக வைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும்," என்று போலிசார் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய லாம் சொன்னார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

