இரான் தலைநகர் டெஹ்ரான் அருகே நேற்று (ஜனவரி 8) விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான போயிங் அல்லது அமெரிக்காவிடம் ஒப்படைக்க இரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனி விமானநிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன் விமானம் கிளம்பிய உடனே இந்த விபத்து நடந்தது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய விமானப் போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை ஈரான் வழிநடத்தலாம். அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளும் அதனைத் தயாரித்த நிறுவனமும் சேர்ந்து ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், “விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை நாங்கள் அதன் உற்பத்தியாளரிடமோ அல்லது அமெரிக்கர்களிடமோ கொடுக்கமாட்டோம்” என்று இரானின் விமானப்போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி அபெட்ஸாதே தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
“இந்த விமான விபத்து குறித்து இரானின் விமானப்போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்யும். இதில் உக்ரேனிய அதிகாரிகளும் பங்கேற்கலாம்” என்று இரானின் விமானப்போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி அபெட்ஸாதே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கனடாவை சேர்ந்த 63 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், விசாரணையில் பங்கெடுக்க கனடாவும் விரும்புவதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity