சிட்னி: காட்டுத் தீ நெருக்கடியைக் கையாண்ட விதம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று வருத்தம் தெரிவித்தார். காட்டுத் தீயை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கத்தின் பருவநிலை மாற்ற கொள்கை குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் திரு மோரிசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ 28 உயிர்களைப் பலிவாங்கியதோடு ஆயிரக்கணக்கான வீடுகளைச் சாம்பலாக்கிவிட்டது.
தீச்சம்பவங்களை இன்னும் சிறப்பான முறையில் கையாண்டிருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
தீச்சம்பவங்களால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாநிலங்களைப் பார்வையிட திரு மோரிசன் சென்றபோது அங்கிருந்த மக்கள் அவரை இடைமறித்து எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
குறிப்பாக, நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கோபர்கோ நகரைச் சேர்ந்த ஒரு பெண் தீயணைப்புச் சேவை மேம்பட வேண்டும் என்று திரு மோரிசனிடம் நேரடியாகக் கூறினார். அருகிலிருந்த வேறு சிலர் திரு மோரிசனை முட்டாள் எனச் சாடினர். தேர்தல் நேரத்தில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்றும் அவர்கள் ஆத்திரம் கொப்பளிக்கக் கத்தி னர். பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இச்சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய திரு மோரிசன் இவை எல்லாம் உணர்ச்சிபூர்வமான சம்பவங்கள் என்றார்.
இருப்பினும் காட்டுத் தீயைச் சமாளிக்கும் விதம் குறித்து மறுஆய்வு செய்ய குழு ஒன்று ஏற்
படுத்தப்படும் என்று அவர் கூறினார். கடந்த மாதம் காட்டுத் தீ பல இடங்களுக்குப் பரவி நிலைமை மோசமடைந்தபோது பிரதமர் மோரிசன் ஹவாயிக்கு சுற்றுலா சென்றது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதனால் தமது பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் அவர்.