தைப்பே: தைவான் அதிபர் தேர்தல் முடிவு வெளிவந்த பின்னர் சீனா தனது கருத்தை வெளிப்படுத்தியது. தைவான் தனது பகுதி என்றும் ஒரே சீனா என்பதை உலகம் அங்கீகரிக்கும் என்றும் பெய்ஜிங் நேற்று அறிவித்தது.
சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் திருவாட்டி சாய் இங் வென் இரண்டாவது முறையாக வென்று அதிபர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்.
அவர் தைவான் சுதந்திர நிர்வாகத்தில் அக்கறை உள்ளவர். சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிரானவர். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் உரையாற்றிய அவர் சீனாவின் மிரட்டல்களுக்குப் பணியப்போவதில்லை என்று சூளுரைத்தார்.
இந்நிலையில் நேற்று அறிக்கை வெளியிட்ட சீனாவின் வெளியுறவு அமைச்சு, “தைவானின் உள்நாட்டு நிலைமையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் பராவாயில்லை. உலகில் ஒரே ஒரு சீனா என்பதும் அதன் ஒரு பகுதிதான் தைவான் என்பதும் அடிப்படை உண்மை. இந்த நிலையில் சீனாவிடம் மாற்றம் இல்லை,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஒரு நாடு; இரு ஆட்சிமுறை’ என்னும் கொள்கையை தைவான் பின்பற்ற வேண்டும் என்பதை சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தைவான் நிலைப்பாடு பற்றி கடந்தாண்டு கருத்துக் கூறிய சீன அதிபர் ஸின்பிங், “சீனாவின் ஒரு பிரதேசமே தைவான். தேவைப் படின் ராணுவ நடவடிக்கை மூலம் அது கைப்பற்றப்படும். இருப்பினும் அமைதித் தீர்வுக்கே முன்னுரிமை,” என்று கூறியிருந்தார்.
ஆனால், ‘ஒரு நாடு; இரு ஆட்சி முறை’ என்னும் சீனாவின் கொள்கையை உறுதியாக ஏற்க மறுப்பதாக திருவாட்டி சாய் தெரிவித்துள்ளார். அவரது ஜனநாயக முற்போக்குக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இவர் அதிபராக நீடிப்பார். “ஜனநாயகத்தின் நன்மதிப்பை உலகிற்கு எடுத்துக்காட்ட தைவான் மக்கள் தங்களது வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி உள்ளனர்,” என்று திருவாட்டி சாய் தமது உரையில் குறிப்பிட்டார்.