உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரானிய புரட்சிப் படையினர் சுட்டு வீழ்த்தி அதிலிருந்த 176 பேரும் மரணமடையக் காரணமாக இருந்த சம்பவம் தொடர்பாக ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் போராட்டக்காரர்களைக் கொல்ல வேண்டாம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரானை ஒருபுறம் எச்சரிக்க, ஈரானுடன் எவ்வித முன்நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்க தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் ஈரானும் அண்மயை காலமாக ஒன்று மற்றொன்றுக்கு எதிராக பதிலுக்கு பதில் நடவடிக்கை எடுத்து வருவதன் விளைவாக அவ்விரு நாடுகளுக்கும் இடையே ஒரு கட்டத்தில் போர் மூளக்கூடிய அபாயம் ஏற்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதன் தொடர்பில் தமது டுவிட்டர் பதிலில் அதிபர் டிரம்ப், “ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொல்ல வேண்டாம், உலகம், அதிலும் முக்கியமாக அமெரிக்கா உங்களை கவனித்து வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் இந்தப் பிரச்சினையில் தான் பதற்றத்தைத் தணிக்க விரும்புவதாக கோடி காட்டியுள்ளது.
இதன் தொடர்பில் ஈரானிய அதிபர் ருஹானியை சந்தித்தபின் பேசிய கத்தார் நாட்டின் அரசர் இந்த வட்டாரத்தில் நிலவும் பதற்றமான சூழலை தணிக்க இரு நாடுகளும் விரும்புவதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவத் தளத்தை கொண்டுள்ள கத்தார், ஈரானுடனும் சுமுக உறவு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இரு நாடுகளும் அந்தப் பகுதியில் மிகப் பெரிய எரிசக்தி வளத்தைக் கொண்டுள்ளன என்று செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“பேச்சுவார்த்தை ஒன்றே இந்த நெருக்கடிக்கு தீர்வு என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என ஈரானுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் கத்தார் நாட்டின் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாது அல்-தானி விளக்கினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஈரானிய அதிபர் ருஹானி, “இந்த வட்டாரத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு தொடர் கலந்துரயைாடலும் ஒத்துைழப்பும் தேவை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்,” என்று கூறினார்.
இந்நிலையில், சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஈரானிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் தயாராக உள்ளதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியுள்ளளார்.
#தமிழ்முரசு