கோலாலம்பூர்: ஓட்டுநரை பலி வாங்கிய மலேசிய கார் விபத்தில் உலகின் முதல்நிலை பூப்பந்து வீரரான கென்டோ மோமோட்டா உட்பட நால்வர் காயங்களுடன் தப்பினர்.
நேற்று அதிகாலை 4.40 மணியளவில் மாஜு அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது.
இதில் பவன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் நோராசாம் காமிஸ் கூறினார்.
தற்போதைய உலக வெற்றியாளரான மோமோட்டாவின் மூக்கு உடைந்து, தாடையில் எலும்புமுறிவு, உதட்டில் தையல் என சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற பயணிகளான ஹிராயமா யூ, மோரிமோடோ ஆர்கிபுகி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பூப்பந்து வீரர் வில்லியம் தாமஸ்ஸும் சம்பவத்தின்போது அவ்வாகனத்தில் இருந்தனர்.
மோமோட்டா நேற்று முன்தினம் நடந்த மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றிப் பெற்றார்.
இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் முன்னாள் உலக வெற்றியாளரான விக்டர் ஆக்செல்சனை அவர் தோற்கடித்தார்.