மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால் காட்டுத் தீ அச்சுறுத்தல் தணியும் என்ற போதிலும் மழையால் ஏற்படும் இடி, மின்னல்களால் காட்டுத் தீ மேலும் பல இடங்களுக்குப் பரவும் அபாயமும் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிறிய அளவிலான இடி, மின்னல் ஏற்பட்டால்கூட காடுகளில் புதிதாகத் தீ பற்றும் அபாயம் உள்ளது. இன்னும் நான்கு, ஐந்து நாட்களுக்கு கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் தட்பவெப்ப நிலை கணிக்க முடியாத நிலையில் உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் மழை சில இடங்களில் பயனுள்ளதாகவும் சில இடங்களில் பயனற்ற வகையில் ஒன்று அல்லது இரண்டு மில்லி மீட்டர் அளவே பெய்துள்ளது. மழை விடாமல் பெய்தால் காட்டுத் தீ பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய மக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து காட்டுத் தீயால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுவரையில் 29 பேர் மற்றும் மில்லியன் கணக்கான மிருகங்களையும் இந்தக் காட்டுத் தீ பலிவாங்கியுள்ளது. பல்கேரியா அளவுள்ள காட்டுத் தீயால் 2,500க்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் 85 இடங்களில் காட்டுத் தீ எரிந்துகொண்டுள்ளது.