மணிலா: பிலிப்பீன்சின் தால் எரிமலை தற்பொழுது குறைந்த அளவிலேயே எரிமலைக் குழம்பைக் கக்கி வருகிறது. ஆனால், தொடர்ந்து எரிமலையின் சீற்றம் நிலநடுக்கத்தை ஏற்படுத்தி வருவதாலும் அதைத் தொடர்ந்து சாலைகளில் விரிசல்கள் ஏற்படுவதாலும் மக்கள் அச்சத்தில் எரிமலை உள்ள பத்தாங்காஸ் பகுதியை விட்டு வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த எரிமலை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதற்கு அறிகுறியாக, அதைச் சுற்றியுள்ள ஏரியிலும் அருகிலுள்ள ஆற்றிலும் நீர் வற்றிக் காணப்படுவதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
இதனால், அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய மக்கள், தங்கள் உடைமைகள், விலங்கு வகைககளை மீட்பதற்காக மீண்டும் அங்கு வருவதை ராணுவத்தினரும் போலிசாரும் தடுத்து வருகின்றனர்.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து கிட்டத்தட்ட 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை கடந்த ஞாயிறன்று சீறியதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும் பலரின் வீடுகள், பண்ணைகள் போன்றவை எரிமலைச் சாம்பலால் முற்றிலும் சூழப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், எரிமலை எந்நேரமும் வெடிக்கும் அபாயம் உள்ளதால், போலிசார் எரிமலைப் பகுதியில் உள்ள ஏரியைச் சுற்றியுள்ள குறைந்தது நான்கு சிறிய நகரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு வளையம் போட்டு தடுத்து வைத்திருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த மக்கள் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“நாங்கள் அனைத்தையும் இழந்து தவிக்கிறோம். இருந்தாலும் சமைக்கும் பாத்திரங்கள், மற்ற பொருட்களை மீட்க வேண்டியுள்ளது.
“இதில் போலிசார் மிகக் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது,” என தமது கோபத்தை வெளிப்படுத்தினார் 59 வயது எர்லிண்டா லண்டிச்சோ என்ற மாது.
எரிமலை வெடித்தபின் இவர் தமது மகனுடன் அந்தப் பகுதியை விட்டு வெளியேறினார்.
இவரைப்போல் மற்றவர்களும் அந்தப் பகுதியை விட்டு வெளியேற ேநர்ந்தது.
இவர்கள் அனைவரையும் போலிசார் மீண்டும் அங்கு செல்லாதவாறு தடுத்து வருகின்றனர்.
அவர்கள் அங்கு தற்போதைய நிலையில் திரும்பாதிருக்க போலிசார் சோதனைச் சாவடிகளையும் தடுப்புகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இங்கிருந்து சுமார் 120,000 பேர் வெளியேறியுள்ள நிலையில் அங்கு அவசரகால உதவிகளை வழங்கும் பொருட்டு அந்தப் பகுதியில் பேரிடர் வட்டாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் குறைந்தது 373 துயர்துடைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கு மக்கள் வெள்ளம், முகக்கவசங்களுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.