தோக்கியோ: ஜப்பானின் மாபெரும் வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டோ, இப்போது பறக்கும் கார் உற்பத்தியில் இறங்கியுள்ளது.
அதற்காக கிட்டத்தட்ட 400 மில்லியன் அமெரிக்க டாலரை ஜோபி ஏவியேஷன் என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் துரித பயணத்திற்கும் இதுபோன்ற பறக்கும் கார்கள் உதவும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
எனவே அதிகமானோர் பயன்படுத்தும் வகையில் கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்திலான பறக்கும் கார்களை உற்பத்தி செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
ஜோபி ஏவியேஷன் பறக்கும் கார்களைத் தயாரிப்பதற்காகவே தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி நிறுவனத்தை விரிவுபடுத்துகிறது.
பறக்கும் கார் தயாரிப்புத் துறையில் ஜோபி ஏவியேஷனுக்கு உற்பத்தி, தரக்கட்டுப்பாடு, செலவுக்கட்டுப்பாடு போன்றவற்றில் டொயோட்டா நிறுவனம் தனது நிபுணத்துவத்தை வழங்கும்.
2009ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜோபி ஏவியேஷன் வாகன உற்பத்தி நிறுவனத்தால் உருவாக்கப்படும் பறக்கும் கார், நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடியதாக இருக்கும்.
இந்தப் பறக்கும் கார்களால் ஹெலிகாப்டர்களைப் போல் செங்குத்தான நிலையில் இறங்கவும் ஏறவும் முடியும்.
தயாரிக்கப்படும் பறக்கும் கார்களைத் தனிப்பட்ட ஆட்களுக்கு விற்பனை செய்வதைக்காட்டிலும் வர்த்தக ரீதியில் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு விமானியுடன் சேர்த்து சேவை வழங்குவதிலேயே நிறுவனம் அக்கறை செலுத்தும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கைதெரிவித்தது.