பெய்ஜிங்: இன்டர்போல் என்று அழைக்கப்படும் அனைத்துலகப் போலிசின் முன்னாள் தலைவருக்கு சீன நீதிமன்றம் நேற்று 13.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
மெங் ஹோங்வெய் ஊழலில் ஈடுபட்டதாக தியேன்கின் நகரில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மெங்கிற்கு இரண்டு மில்லியன் யுவென் ($391,130) அபராதமும் விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மெங் ஒப்புக்கொண்டதாகவும் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டது.
ஊழலுக்கு எதிராக சீன அதிபர் ஸி ஜின்பிங் எடுத்த நடவடிக்கையில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் சிக்கினர். அவர்களில் பொதுமக்கள் பாதுகாப்புத் துறையின் முன்னாள் துணை அமைச்சருமான மெங்கும் ஒருவர்.
தமது அரசியல் எதிரிகளை அழிக்க இந்த ஊழல் எதிர்ப்பு அதிரடி நடவடிக்கையை அதிபர் ஸி தொடங்கியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிறகு தமது கணவரைக் காணவில்லை என்று 2018ஆம் ஆண்டில் மெங்கின் மனைவி புகார் செய்தார்.
அதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து தலைவர் பதவியிலிருந்து மெங் விலகியுள்ளதாக பிரான்சில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இன்டர்போல் தெரிவித்தது.
சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான பெரும் அளவிலான பணத்தை மெங் தமது சொந்த பயனுக்காகச் செலவு செய்ததாகவும் தமது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவுகளுக்கு கட்டுப்படவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்ததாக சீன அரசாங்கம் தெரிவித்தது,
மெங்கின் மனைவிக்கும் அவரது இரு பிள்ளைகளுக்கும் பிரான்ஸ் அடைக்கலம் வழங்கியுள்ளது.