வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தகுதியிழப்பு விசாரணையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஆவணங்கள், அதிபருக்கு எதிராக சாட்சிகளை விசாரிப்பது தொடர்பாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சக் ஷுமர் என்பவர் முன்வைத்த கோரிக்கையை குடியரசுக் கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்நாட்டு செனட் சபை செவ்வாய்க்கிழமை நிராகரித்து விட்டது.
இதுபோன்ற கோரிக்கையை செனட் சபை நிராகரித்திருப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் டிரம்ப் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனின் நடவடிக்கைகளை விசாரிக்குமாறு உக்ரேன் நாட்டுக்கு நெருக்கடி கொடுத்தாரா என்பது குறித்து அதிபரின் வெள்ளை மாளிகை ஆவணங்களை முன்வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் உக்ரேனுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் பின்னர் அதுகுறித்த விசாரணையை தடுத்ததாகவும் அதிபர் மீது ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் அவர் அதிபர் பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்றும் அவர் பதவியை விட்டு நீக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயகக் கட்சி கூறிவருகிறது.
இதில் தான் எவ்வித முறையற்ற செயலிலும் ஈடுபடவில்லை என்றும் ஜனநாயகக் கட்சியினரின் விசா ரணை இவ்வாண்டு பிற்பகுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலை தமக்கு எதிராக திருப்பிவிடும் என்றும் அதிபர் டிரம்ப் பதில் வாதிடுகிறார்.
இது குறித்த செனட் சபை விவாதத்தின்போது திரு டிரம்ப்பின் தலைமை வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று வாதிட்டார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் அதிபருக்கு எதிராக பெரும் அளவு ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த விசாரணை தொடர்பில் செனட் சபை நேற்று விதிமுறைகளை வகுத்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. அதன்படி, செனட் சபையின் தலைவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான மிட்ச் மிக்கோனல் விசாரணையில் சாட்சிகளை அழைக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தார்.
அத்துடன், திரு டிரம்ப் தமது தரப்பு வாதங்களை முன்வைக்க மூன்று நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. இது முன்னதாக இரண்டு நாட்களாக குறிப்பிடப்பட்டிருந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
விசாரணைக்கான விதிமுறைகள் இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில், இவை முன்னாள் அதிபர் கிளிண்டனுக்கு எதிராக நடைபெற்ற விசாரணையில் வகுக்கப்பட்ட விதிமுறைகளை ஒத்திருப்பதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
தற்போதைய நிலையில் இந்த விசாரணை அடுத்த வாரமே முடிவுற வாய்ப்பிருப்பதாகவும் செனட் சபையில் குடியரசுக் கட்சிக்கு உள்ள பெரும்பான்மையால் அதிபர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.