கோலாலம்பூர்: பாமாயில் எனப்படும் செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகள் அறிவித்ததைத் தொடர்ந்து வேறு சந்தைகளை நாடத் தொடங்கி உள்ளது மலேசியா.
காஷ்மீர் மாநிலத்தை இந்தியா அபகரித்துக்கொண்டதாக கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்ததில் இருந்தே இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் இலைமறை காயாக பூசல் நிலவியது. தொடர்ந்து, இந்திய அரசாங்கம் அண்மையில் திருத்திய அதன் குடியுரிமைச் சட்டத்தையும் டாக்டர் மகாதீர் விமர்சித்து இருந்தார்.
இவ்விரு பிரச்சினைகள் தொடர்பாக மலேசியாவுக்குப் பாடம் புகட்டக் கருதிய இந்தியா, மலேசியாவிலிருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய வேண்டாம் என வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டதோடு சில கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து இந்தோனீசியாவிலிருந்து பாமாயிலை வாங்கத் தொடங்கிய இந்திய வர்த்தகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் முந்திய விலையைக் காட்டிலும் செம்பனை எண்ணெய் டன்னுக்கு 15 டாலர் முதல் 20 டாலர் வரை உயர்த்தப்பட்டது.
இந்தியாவுடனான பூசலைத் தீர்க்க அரசதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அண்மையில் அறிவித்திருந்த மலேசியாவின் பார்வை வேறு நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது. பாமாயில் வர்த்தகத்துக்காக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா ஆகிய நாடுகளிடம் மலேசியா பேசி வருகிறது.
குறிப்பாக, பாகிஸ்தானுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட மலேசிய அடிப்படைத் தொழில் அமைச்சர் தெரசா கோக், பாமாயில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது. இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் பாகிஸ்தான் 74,000 டன் பாமாயிலை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 80 விழுக்காடு அதிகம் என்று எஸ்ஜிஎஸ் மலேசியா என்னும் சரக்குக் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது. அதேவேளை இந்தியாவிற்கான மலேசிய பாமாயில் விற்பனை கிட்டத்தட்ட 49 விழுக்காடு வீழ்ச்சியடைந்து 30,500 டன் ஆகிவிட்டது.