20,000 தமிழர்கள் மரணம் என்ற அதிபரின் அறிவிப்புக்கு இலங்கை அரசியல் கட்சி எதிர்ப்பு

20,000 தமிழர்கள் மரணம் என்ற அதிபரின் அறிவிப்புக்கு இலங்கை அரசியல் கட்சி எதிர்ப்பு

1 mins read
539d56f0-ead5-4317-9824-cca7fa9dcd8c
படம்: ராய்ட்டர்ஸ் -

கொழும்பு: இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது காணாமல் போன 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்துவிட்டதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்ததற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இறுதிப் போரின்போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட தமிழர்களின் கதி என்ன என்பது இன்று வரை மர்மாக உள்ளது.

காணாமல் போனவர்களின் நிலையை அறிவிக்க கோரி அவர்களது உறவினர்கள் பல்லாண்டு காலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை தம்மைச் சந்தித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் தூதரிடம் 20,000 தமிழர்களும் இப்போது உயிருடன் இல்லை என்று அதிபர் கோத்தபய கூறினார். தொடர்ந்து அறிவிக்கை வெளியிட்ட அதிபர் அலுவலகம், உயிரிழந்த அனை வருக்காகவும் மரணச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

இந்த அறிவிப்பு, உறவுகளை மீட்கக் கோரி போராடி வருவோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஸ்ரீதரன், "காணாமல் போனவர்கள் அனைவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தவர்கள். ஆகையால் அவர்களின் கதி பற்றி இலங்கை ராணுவமே பதில் சொல்ல வேண்டும்," என்று கூறி அதிபரின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.