பேங்காக்: தாய்லாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்திரை அணிந்த மர்ம ஆசாமி ஒருவர் ஆயுதம் தாங்கிய கொள்ளையில் ஈடுபட்டதோடு ஒரு குழந்தை உள்ளிட்ட மூவரை சுட்டுக்கொன்றதாக போலிசார் தெரிவித்து இருந்தனர். இம்மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆடவரை போலிசார் தீவிரமாகத் தேடி வந்தனர். அதன் பலனாக நேற்று அவர் பிடிபட்டார். மத்திய லோப்புரி மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலிசார் கூறினர்.
நகைக்கடை ஒன்றில் நுழைந்த மர்ம ஆசாமி 500,000 பாட் (S$22,000) மதிப்புள்ள நகை, பணத்தைக் கொள்ளையடித்த பின்னர் கண்மூடித்தனமாகச் சுட்டது அந்தக் கடையில் இருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவாகி இருந்தது.
கைது செய்யப்பட்ட ஆடவர் தமது குற்றச்செயலை மறுக்கவில்லை என்றும் போலிசார் சரியான நபரையே கைது செய்திருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும் தேசிய போலிஸ் தலைவர் ஜக்திப் சாய்ஜின்டா செய்தியாளர்களிடம் கூறினார்.