புதிய வகை கொரோனா கிருமி பரவி பல உயிர்களைப் பலி வாங்கி வரும் நிலையில் அந்தக் கிருமி தோன்றிய இடமாகக் கருதப்படும் சீனாவின் வூஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 11 மில்லியன் பேர் வசிக்கும் அந்த நகரிலிருந்து யாரும் வெளியேறவோ அந்நகருக்குள் செல்லவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நாளை சனிக்கிழமை தொடங்கும் வேளையில் பல மில்லியன் பேர் சீனாவில் உள்ள தங்களது சொந்த ஊருக்குப் பயணமாகி வருகின்றனர். அவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி விடாமல் பாதுகாப்பது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. ரயில், பேருந்து, படகு என வூஹான் நகரின் எல்லாவித போக்குவரத்து கட்டமைப்புகளும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அந்நகரின் விமானப் போக்குவரத்து இன்று காலை 10 மணி முதல் அனுமதிக்கப்படவில்லை என்றும் உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வூஹானின் பிரபல ஹான்காவ் ரயில் நிலையம் இன்று பயணிகள் யாருமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. அதன் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. அவசர, அவசிய காரியங்கள் தவிர்த்து மக்கள் யாரும் வூஹான் நகரை விட்டு வெளியேற வேண்டாம் என்று உள்ளூர் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் அறிவித்து வருவதாக சீன அரசாங்கத் தொலைக்காட்சி கூறியது.
வூஹானில் இருந்து சுமார் 70 கி. மீ. தொலைவில் உள்ள ஹுவாங்காங் நகரில் உள்ள ரயில் நிலையமும் மூடப்பட்டது. அந்நகரில் சுமார் 7.5 மில்லியன் பேர் வசிக்கின்றனர். மேலும் ஒரு மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இசௌ நகரின் ரயில் நிலையம் இன்றிரவு முதல் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதன்கிழமை இரவு வரை 17 பேர் உயிரிழந்ததோடு 571 பேர் பாதிக்கப்பட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது. மேலும் 393 பேர் கிருமி தொற்றிய சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது. சீனா தவிர்த்து கொரோனா கிருமி தொற்றிய எட்டு சம்பவங்கள் உலக நாடுகளில் பதிவாகி உள்ளதாகவும் அவற்றில் நான்கு தாய்லாந்தில் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன் நகரில் கிருமி தொற்றிய ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும் அண்மையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய 16 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நகரின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
இந்தியாவின் விமான நிலையங்களில் விழிப்புநிலை
கொரோனா கிருமி தொற்றியதாக இந்தியாவில் இதுவரை எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்று கூறி அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து நேற்று முன்தினம் இந்தியாவின் ஏழு அனைத்துலக விமான நிலையங்களில் வந்திறங்கிய பயணிகளிடம் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சீனாவின் பல்வேறு நகரங்களிலிருந்து சென்னை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கோல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் வந்திறங்கிய 43 விமானங்களில் இருந்த 9,156 பயணிகளிடம் உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் பிரீத்தி சுடான், இன்றும் பரிசோதனை தொடர்ந்ததாகக் கூறினார்.