யோக்கொஹாமா: தபால்காரர் ஒருவர் கடந்த 16 ஆண்டுகளாக கடிதங்களையும் பொட்டலங்களையும் விநியோகிக்காமல் தமது வீட்டிலேயே மறைத்து வைத்திருந்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
கனகாவா மாநிலம், சகாமிஹாராவைச் சேர்ந்த அந்தத் தபால்காரரின் வீட்டில் கிட்டத்தட்ட 24,000 கடிதங்களும் பொட்டலங்களும் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
“கடிதங்களை விநியோகிப்பது பெரிய தொந்தரவாக இருந்தது,” என்று அந்த 61 வயது தபால்காரர் சொன்னதாக போலிசார் கூறினர்.
பணிஓய்வு பெற்றுவிட்ட அவர் மறுவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் யோக்கொஹாமாவில் உள்ள ஓர் அஞ்சல் நிலையத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.
கடந்த நவம்பர் 20ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட உள்ளகச் சோதனையின்போது அவர் கடிதங்களை விநியோகிக்காமல் தம் வீட்டில் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த 24,000 அஞ்சல்களையும் மன்னிப்புக் கடிதங்களுடன் விநியோகிக்க அஞ்சல் துறை திட்டமிட்டு வருகிறது.