வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பதவி விலக வேண்டும் எனக் கோரி அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான தொடக்க வாதங்களை முன்வைக்க மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய இரண்டாவது நாள் வாதத்தின்போது அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது.
நேற்றைய வழக்கு விசாரணையின்போது சாட்சிகளின் சாட்சியங்கள், தொலைபேசி பதிவுகள், அதிபர் டிரம்ப் முன்பு கூறியவை ஆகியவற்றை ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்தனர்.
அதிபர் டிரம்ப் குற்றம் ஏதும் புரியவில்லை என்றும் அவரை பதவி விலகச் செய்திட முடியாது என்றும் குடியரசுக் கட்சி வாதிடுகிறது.
ஆனால் அதிபர் டிரம்ப் தமது அதிபர் பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாக ஜனநாயகக் கட்சி அடித்துக் கூறுகிறது.
முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடில் வழங்கப்படும் ஆதரவு மீட்டுக்கொள்ளப்படும் என்று உக்ரேனுக்கு அதிபர் டிரம்ப் நெருக்குதல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
தமக்கு எதிராக சதி வலை பின்னப்படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையின்கீழ் உக்ரேனில் உள்ள ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிபர் டிரம்ப் முயன்றதாக குடியரசுக் கட்சியினர் கூறினர்.
ஆனால் உக்ரேனில் பெரும் பிரச்சினையாக இருக்கும் ஊழல் பற்றி அதிபர் டிரம்ப்புக்குக் கவலை இல்லை என்றும் தாம் பலன் அடையும் நோக்கில் அவர் செயல்பட்டதாகவும் ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
திரு ஜோ பைடனும் அவரது மகன் திரு ஹன்டர் பைடனும் ஊழலில் ஈடுபடவில்லை என்று ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர்.
இதற்குக் குடியரசுக் கட்சியினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
தொடக்க வாதங்களுக்குப் பிறகு கேள்விகளை எழுதி சமர்ப்பிக்க செனட்டர்களுக்கு 16 மணி நேரம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, புதிய சாட்சிகளையும் ஆதாரங்களையும் கொண்டு வர அழைப்பாணை அனுப்புவது குறித்து செனட்டர்கள் வாக்களிப்பர்.
அதிபர் டிரம்ப்பைக் குற்வாளி எனத் தீர்ப்பளித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 67 வாக்குகள் தேவை.
ஒருவேளை புதிய சாட்சியங்கள் அனுமதிக்கப்பட்டாலும்கூட, டிரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது சந்தேகம் என்று கருத்து நிலவி வருகிறது.
டிரம்ப்புக்கு எதிராக 67 வாக்குகளைப் பெற 20 குடியரசுக் கட்சி செனட்டர்கள் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
ஆனால் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அவரது சொந்த கட்சியினர் வாக்களிக்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.